அவசர சட்டங்களை வாபஸ் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்தது

மத்திய, மாநில அரசுகளின் அவசர சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசர சட்டங்களை வாபஸ் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்தது
Published on

கிருஷ்ணகிரி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் மற்றும் அவசர சட்டங்களை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. அதன்படி கெலமங்கலம் பஸ் நிலையம் அருகில் நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக, கெலமங்கலம் கூட்ரோட்டில் இருந்து, பஸ் நிலையம் வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

இதற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் லகுமைய்யா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் நாகராஜ், கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி, கட்சியினர் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில துணைத்தலைவர் சுந்தரவள்ளி, மாவட்ட கவுன்சிலர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு கண்ணு, மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் சேகர் கலந்து கொண்டு பேசினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட நிர்வாக குழு சுபத்திரா, ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

வேப்பனப்பள்ளி தபால் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணை செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார். இதையடுத்து அவர்கள் குப்பம் சாலையில் இருந்து தபால் அலுவலகம் வரையில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மத்திகிரியில் நடந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாதையன் தலைமை தாங்கினார். இதில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆதில், நிர்வாகிகள் நூரு, வேலு, முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பாகலூரில் இந்திய கம்யூனிஸ்டு கடசியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com