

சென்னை,
சென்னை அடையாறில் எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கத்தின் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் நேற்று சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை ஓ.என்.ஜி.சி. காவிரி படுகை மேலாளர் டி.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலப்பொருட்கள் உற்பத்தி குறைவாக இருக்கிறது. கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது அல்லது சேமிப்பது குறித்து விழிப்புணர்வு அளிப்பதற்காக சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது என்றார்.
இதில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சியாம்மோகன், எஸ்.பி.செல்வம், சி.என்.எஸ்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், எண்ணெய் நிறுவன ஊழியர்கள், குடும்பத்தினர் என 1,400 பேர் பங்கேற்ற இந்த சைக்கிள் பயணம் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து புறப்பட்டு பெருங்குடி, சுங்கச்சாவடி வழியாக சென்று பழைய மாமல்லபுரம் சாலையில் முடிவடைந்தது.