அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க வலியுறுத்தி சட்டமன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா

ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க வலியுறுத்தி சட்டமன்ற படிக்கட்டில் அமர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க வலியுறுத்தி சட்டமன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து பொதுமக்கள் தர்ணா
Published on

புதுச்சேரி,

புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ. அன்பழகனை சந்தித்து தங்களது பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமைச்சர் கந்தசாமியிடம் அவர் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து ஆய்வுப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று காலை சட்டசபை வளாகத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்து அமைச்சர் கந்தசாமி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வருகிற 11-ந் தேதி அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்படும். அப்போது நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதை ஏற்று அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com