பிளஸ்-1 மாணவி தற்கொலையில் என்ஜினீயரிங் மாணவர் கைது

மாங்காட்டில் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த வழக்கில் என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-1 மாணவி தற்கொலையில் என்ஜினீயரிங் மாணவர் கைது
Published on

பிளஸ்-1 மாணவி தற்கொலை

பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாங்காட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி, அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான 3 கடிதங்களை மாங்காடு போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் பாலியல் அத்து மீறல் என மாணவி குறிப்பிட்டு இருந்தாலும், அதற்கு காரணமானவர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.

கல்லூரி மாணவர் கைது

மாணவியின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக அவரிடம் பேசி இருந்த செல்போன் எண்களை வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 4 பேரை பிடித்து விடிய, விடிய விசாரித்து வந்தனர். அதில் மாங்காட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (20) என்பவர்தான் மாணவியின் செல்போனில் அதிகளவில் பேசியதும், அவரது செல்போனில் இருந்துதான் மாணவிக்கு, ஆபாச குறுந்தகவல்கள், வாட்ஸ்-அப்பில் ஆபாச வீடியோக்கள் அனுப்பி இருப்பது தெரியவந்தது.

குன்றத்தூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் விக்னேசை, போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு மாவட்ட மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை ஜனவரி 3-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

காதல்

தற்கொலை செய்து கொண்ட மாணவி, பள்ளி முடிந்து மாலை நேரத்தில் தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். அப்போது விக்னேசுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அதன்பிறகு இருவருமே காதலித்து வந்தனர். இதற்கிடையில் விக்னேசுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. அதன்பிறகு மாணவியின் செல்போனுக்கு விக்னேஷ், ஆபாசமான படங்கள், வீடியோக்களை அனுப்பியதுடன், ஆபாசமாக தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருக்கு தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கவுதமன் நேரில் ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com