

சூரமங்கலம்,
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முரளிதரன். இவர் தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபிநவ் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு பெற்றோர் விலை உயர்ந்த ஒரு செல்போன் வாங்கி கொடுத்தனர்.
அந்த செல்போன் தொலைந்து போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் அபிநவ் விரக்தியில் இருந்தார். விலை உயர்ந்த செல்போன் வாங்கிய சில நாட்களுக்குள் தொலைந்து போய்விட்டதே என்று புலம்பிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் போலீசார், அபிநவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து, மாணவர் அபிநவ் விலை உயர்ந்த செல்போன் தொலைந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.