

தூத்துக்குடி, பிப்:
தூத்துக்குடியில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுல்காந்தி வருகை
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று காலையில் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காலை 11.45 மணிக்கு வந்தார்.
அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட ராகுல்காந்திக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்ட வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் வரவேற்பு பேனர்கள், கட்சிக்கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாழை மரங்கள், கரும்புகளும் கட்டப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களிலும் காங்கிரசார் திரண்டு வந்து ராகுல்காந்திக்கு பூங்கொத்து, பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர். இதனால் தூத்துக்குடி மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
கலந்து கொண்டவர்கள்
வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவெல்ல பிரசாத், மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லக்குமார் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன்,
தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹாசன் மவுலானா, மாநில மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், தூத்துக்குடி மேற்கு வட்டார தலைவர் ஏசுவடியான், கட்டாலங்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கர ஈசுவரி ஏசுவடியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.