தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இலவச பயிற்சி

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நடந்த
தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இலவச பயிற்சி
Published on

நெல்லை,

புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நடந்த தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் கூறினார்.

நெல்லை மாவட்ட தொழில் மையம் மூலம் புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குவதற்கு வங்கிகளுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பரிந்துரை செய்யப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட தொழில் மையம், அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டலம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை நேற்று நடத்தியது.

நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஞானசேகர் தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் முகாமை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

அண்ணா பல்கலைக்கழகம் தொழில் நுட்ப கல்வியை கற்று கொடுக்கிறது. அதோடு மட்டும் அல்லாமல் இளம் தொழில் முனைவோர்களுக்கு தொழில் பயிற்சியும் வழங்க தயாராக இருக்கிறது. எந்த தொழிலை இளைஞர்கள் தேர்வு செய்தாலும், அந்த தொழிலில் ஆர்வம் இருக்க வேண்டும். அதை பற்றி தெரிந்து கொண்டு பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தங்களது தொழிலை செய்ய வேண்டும்.

சமுதாய சிந்தனையுடன் இளைஞர்கள் தொழில் தொடங்கினால், தான் வெற்றி பெற முடியும். ஏதோ தொழில் செய்ய வேண்டுமே என்ற எண்ணில் புதிய தொழில் தொடங்க கூடாது. இளைஞர்கள் தொழிலை தேர்வு செய்த பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தை அணுகினால் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற யுக்தியை நாங்கள் கற்று கொடுப்போம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் ஏராளமான மாணவமாணவிகள் படித்து விட்டு வெளியே வருகிறார்கள். அனைவருக்கும் நினைத்தது போல் வேலை கிடைப்பது இல்லை. மாத சம்பளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் நுட்ப மாணவர்கள் இருக்க கூடாது. நீங்கள் படித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று தான் அறிவுரை கூறி வருகிறோம்.

அதுபோல் பல என்ஜினீயரிங் மாணவர்கள் புதிய தொழிற்சாலைகள் தொடங்கி பலருக்கு வேலை கொடுத்து வருகிறார்கள். நீங்களும் உங்களுக்கு விருப்பமான, ஓரளவு தெரிந்த தொழிலை தொடங்குங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அண்ணா பல்கலைக்கழகம் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து முகாம் நடந்தது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சைலஸ் சற்குணம், இளைஞர் வளர்ச்சி மைய இயக்குனர் வைரவராஜா உள்பட பலர் பேசினார்கள். இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு புதிதாக தொழில் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு மானியத்துடன் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com