

ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் 7 மாதங்களாக நடந்து வந்த அகழாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
அகழாய்வு பணிகள்
தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.
ஆதிச்சநல்லூர் ஊரின் மையப்பகுதி மற்றும் கால்வாய் கிராமத்துக்கு செல்லும் வழியில் என சுமார் 10-க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொற்கையில் நடந்த அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதாவது 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் 29 அடுக்குகள் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன.
48 முதுமக்கள் தாழிகள்
இதேபோல் சிவகளையில் நடந்த 2-ம் கட்ட அகழாய்வு பணியில், இறந்தவர்களை புதைத்த சிவகளை பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீமூலக்கரை ஆகிய மூன்று இடங்களில் 18 குழிகளும், பராக்கிரமபாண்டி திரடு, ஆவாரங்காடு திரடு, பொட்டல் திரடு, செக்கடி ஆகிய நான்கு இடங்களில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக 8 குழிகளும் அமைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.
இதில் குழந்தைகள் விளையாடும் வட்டசில்கள், பெண்கள் அணியும் காதணிகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பொருநை அருங்காட்சியகம்
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, சிவகளையில் கடந்த ஆண்டு முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட நெல்மணிகளை ஆய்வு மேற்கொண்டதில் அதன் வயது 3200 ஆண்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் தாமிரபரணி கரையில் உள்ள இந்த பொருநை நாகரிகத்தின் வயது 3200 ஆண்டுகள் என்று அதன் தொன்மை பறைசாற்றப்பட்டது.
இதனை பெருமைப்படுத்தும் விதமாக ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் பொருநை அருங்காட்சியம் என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
2 ஆயிரம் பழங்கால பொருட்கள்
இந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த அகழாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த அகழாய்வு பணியில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகளையில் அடுத்த ஆண்டு 3-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொற்கையில் அடுத்த ஆண்டு கடல்சார் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார். இதையடுத்து அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-----