

தஞ்சாவூர்,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தஞ்சையில் இன்று (வெள்ளிக் கிழமை) 5 திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். பின்னர் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உள்பட தி.மு.க. முன்னோடிகளின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு நேற்றுஇரவு வந்தார். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஆர்.ஆர்.நகரில் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பொன்னாடை, புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.
இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் எம்.ராமச்சந்திரன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, நகர செயலாளர் நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.ராமலிங்கம், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், காரில் புறப்பட்டு சங்கம் ஓட்டலுக்கு சென்றார். அங்கு தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவாணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் ஓட்டலில் இரவு தங்கினார்.
மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அண்ணன் மு.க.தமிழரசு, அக்காள் செல்வி, எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் உடன் வந்தனர்.