இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வு - 1,716 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வினை 1,716 பேர் எழுதினர்.
இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான தேர்வு - 1,716 பேர் எழுதினர்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 3 பணிக்கான எழுத்து தேர்வை 1,716 பேர் எழுதினர். 1,276 பேர் தேர்வு எழுதவில்லை.

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 2 ஆயிரத்து 992 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தொரப்பாடி அரசுப்பள்ளி, ஊரீசு பள்ளி, தோட்டப்பாளையம் பெண்கள் அரசுப்பள்ளி, வெங்கடேஸ்வரா பள்ளி, கோடையிடி குப்புசாமி அரசுப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 10 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று 10.30 மணி வரை வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. தொடர்ந்து மாலை 2.30 மணிமுதல் 5.30 மணி வரை 2-வது கட்டமாக தேர்வு நடந்தது.

விண்ணப்பித்தவர்களில் 1,716 பேர் தேர்வு எழுதினர். 1,276 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையத்தில் ஆய்வு செய்து தேர்வில் முறைகேடு எதுவும் நடக்கிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்.

தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 4 பணிக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com