

சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் கதிரேசன்(வயது 55) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஆலையில் தயாரித்த பட்டாசை வெடித்து சோதனை செய்த போது, காற்றில் பறந்து வந்த தீப்பொறி அங்கு காய வைக்கப்பட்டிருந்த பட்டாசு மீது விழுந்தது. இதனால் அந்த பட்டாசுகள் வெடித்தன.
மேலும் அங்கு 4 அறைகளில் காய வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மதிய உணவு இடைவேளையின் போது இந்த விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.