வங்கியில் போலி கையெழுத்திட்டு ரூ.1 கோடி மோசடி செய்தவருக்கு ஆயுள் தண்டனை

வங்கியில் போலி கையெழுத்திட்டு ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
வங்கியில் போலி கையெழுத்திட்டு ரூ.1 கோடி மோசடி செய்தவருக்கு ஆயுள் தண்டனை
Published on

மும்பை,

துபாயில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஹூசைன் நென்சே. இவர் கடந்த 1996-ம் ஆண்டு தென்மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் 3 வருட சேமிப்பு திட்டத்தில் ரூ.1 கோடி வைப்பு தொகை செலுத்தி இருந்தார். பின்னர் 1999-ம் ஆண்டு அவர் தனது வைப்பு நிதியில் தொழில் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது, அவரது வைப்பு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் வேறொருவர் எடுத்து இருந்ததும், அவரது பெயரில் வங்கியில் போலி கணக்கு தொடங்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். இதில் வங்கி அதிகாரிகள் 2 பேர் உள்பட மூன்று பேர் உடந்தையுடன் நரேந்திர பாட்டீல் என்பவர் ஹூசைன் நென்சேயின் போலி கையெழுத்தை போட்டு பணத்தை அபேஸ் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேருக்கு கடந்த 2015-ம் ஆண்டு கோர்ட்டு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இந்தநிலையில், தலைமறைவாக இருந்த நரேந்திர பாட்டீல் 2016-ம் ஆண்டு சிக்கினார். அவர் மீதான வழக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு கூறிய சிறப்பு கோர்ட்டு, நரேந்திர பாட்டீலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 கோடி அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com