

கொள்ளேகால்,
ஹனூர் அருகே, மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து செத்து போன யானையின் தந்தங்களை வெட்டிய தொழிலாளியை வனத்துறையினர் கைது செய்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா உக்கியம் பகுதியை சேர்ந்தவர் சன்னபுட்டா. தொழிலாளி. இந்த நிலையில் சன்னபுட்டாவின் வீட்டில் யானையின் தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று காலை சன்னபுட்டாவின் வீட்டிற்குள் புகுந்து வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரது வீட்டில் யானையின் தந்தங்கள் இருந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதன்பின்னர் சன்னபுட்டாவிடம், யானையின் தந்தங்கள் எப்படி கிடைத்தது என்று வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உக்கியம் வனப்பகுதிக்குள் விறகு பொறுக்க சென்றதாகவும், அப்போது மலையின் உச்சியில் இருந்து ஒரு யானை கால் தவறி கீழே விழுந்து செத்ததாகவும், அந்த யானையின் தந்தங்களை வெட்டி வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து சன்னபுட்டாவை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து யானை தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சன்னபுட்டாவை அழைத்து கொண்டு வனத்துறையினர், வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது வனப்பகுதிக்குள் உடல் அழுகிய நிலையில் ஒரு யானை செத்து கிடந்தது. அந்த யானையை பார்வையிட்டு வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது மலையின் உச்சியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து அந்த யானை செத்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அதே பகுதியில் யானை குழிதோண்டி புதைக்கப்பட்டது. கைதான சன்னபுட்டா மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.