குளத்தில் மூழ்கி விவசாயி பலி

துறையூர் அருகே தந்தை கண்முன்னே குளத்தில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
குளத்தில் மூழ்கி விவசாயி பலி
Published on

துறையூர், நவ.24-
துறையூர் அருகே தந்தை கண்முன்னே குளத்தில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முத்துராயன் பாளையம் கீழூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மலர்மன்னன் (வயது 22), விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று தந்தையும், மகனும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள பாப்பநாயக்கன் குளத்தில் ஆடுகளை குளிப்பாட்ட எண்ணி குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்கிறது என பார்ப்பதற்காக மலர்மன்னன் குளத்துக்குள் இறங்கினார்.
சாவு
அப்போது, குளத்தில் ஆழம் அதிகமாக இருந்ததாலும், சகதி அதிகமாக இருந்ததாலும் மலர்மன்னன் அதில் சிக்கி தவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் சத்தம் போட்டார். உடனடியாக அங்கிருந்த விவசாயிகள், காட்டுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து மலர்மன்னனை மீட்க முயன்றனர்.
ஆனால் அவரை பிணமாக தான் மீட்க முடிந்தது. இது குறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை கண்முன்னே மகன் இறந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com