கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

வேதாரண்யம் அருகே கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சி, வானவன்மகாதேவி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் வாழ்வாதார தொகுப்புத் திட்டத்தின்கீழ் விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலில் விழுந்த தென்னமரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் மறுசீரமைப்பு பணிகள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிதாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

நிவாரண தொகை

கஜா புயல் கடற்கரையோரம் இருந்த மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டது. தொடர்ந்து மக்களுக்கான மறுவாழ்வு பணிகள், பட்டா வழங்குதல், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குதல், அரசு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளுதல், மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டு நீர்ப்பாசன கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வெள்ளப்பள்ளம் கிராமத்தில் 97 விவசாயிகளுக்கு 7,000 தென்னங்கன்றுகளும், என்னுடைய சொந்த முயற்சியால் 1,500 தென்னங்கன்றுகளும் வழங்கப்பட உள்ளன.

இதுவரை 58 விவசாயிகளுக்கு 2,424 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 765 விவசாயிகளுக்கு 28,505 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. வெள்ளப்பள்ளம் கிராமத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 17 லட்சத்து 21 ஆயிரத்து 900 நிவாரண தொகை வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் இணை இயக்குனர் (வேளாண்மை) நாராயணசாமி, துணை இயக்குனர் (வேளாண்மை) பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் (வேளாண்மை) கருப்பையா, வேளாண் உதவி விதை அலுவலர் ரவி, தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் அவை.ஆர்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com