கடன் தள்ளுபடி, நிவாரணம் வேண்டி கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள், பெண்கள் படையெடுப்பு - வரிசையில் காத்திருந்தவர்களை தேடி வந்து கலெக்டர் மனு பெற்றார்

கடன் தள்ளுபடி, நிவாரணம் வேண்டி கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள், பெண்கள் படையெடுத்ததால் வரிசையில் காத்திருந்தவர்களை தேடி வந்து கலெக்டர் மனு பெற்றார்.
கடன் தள்ளுபடி, நிவாரணம் வேண்டி கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள், பெண்கள் படையெடுப்பு - வரிசையில் காத்திருந்தவர்களை தேடி வந்து கலெக்டர் மனு பெற்றார்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் அளிப்பார்கள்.

வழக்கமாக 250 முதல் 300 மனுக்கள் வரும். இந்த மனுக்களில் பெரும்பாலும் கடன்தள்ளுபடி, பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தான் இடம் பெற்றிருக்கும். கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சுயதொழில் தொடங்கவும், பயிர் சாகுபடி செய்யவும் என பல்வேறு தேவைகளுக்காக மகளிர் சுயஉதவிக்குழுவினர், விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். கஜா புயல் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதால் கடனை ரத்து செய்ய வேண்டும் என மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், விவசாயிகள் ஏராளாமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று படையெடுத்தனர். மேலும் கஜா புயலால் பாதித்த மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரியும் கிராமமக்கள் மனுக்களுடன் வந்தனர்.

இவர்கள் கார்கள், சரக்கு வேன், ஆட்டோக்களில் வந்ததால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீண்டவரிசையில் காத்திருந்து கலெக்டரிடம் மக்கள் மனுக்களை அளித்தனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். நேற்று கூட்ட நேரம் முடிவடைந்த பின்னரும் 200-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர். இதை அறிந்த கலெக்டர் அண்ணாதுரை, வரிசையில் காத்திருந்த மக்களை தேடி வந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com