உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி கையில் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

குண்டடத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகள் கையில் சட்டி ஏந்தும் நூதன போராட்டம் நடத்தினர்.
உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி கையில் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
Published on

குண்டடம்,

திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை அருகே பந்தலிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு பி.ஏ.பி தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி உப்பாறு பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திற்கு நீரை முறைப்படுத்தி வழங்குவதற்கு நடுவன் மன்றத்தை அமைக்க வேண்டும்.

அணையின் முழு கொள்ளளவு தண்ணீரை வழங்க வேண்டும். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் நீர் நிர்வாகத்தை பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட நீர் மேலாண்மை ஒழுங்குகள் விதி 1994-ன் படி முறையாக நடத்த வேண்டும். என தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரை நிர்வாணம்

இந்த போராட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றும் வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் நேற்று விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து நேற்று கைகளில் சட்டிகளை ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர். இதில் உப்பாறு பாசன விவசாயிகள் விவசாய சங்க அமைப்புகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com