விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Published on

திருவள்ளூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவள்ளூர் வட்ட தலைவர் டில்லி, கொசஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், செயலாளர் முருகன் மற்றும் திரளான விவசாயிகள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருவள்ளூரை அடுத்த மெய்யூர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 504 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தோம். தற்போது இந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 201 விவசாயிகள் இழப்பீடு பெற்றுள்ளனர். மீதமுள்ள 303 பேருக்கு பயிர் காப்பீடு இது நாள் வரையிலும் வழங்கப்படவில்லை.

இது குறித்து நாங்கள் பல முறை வேளாண்மை அதிகாரிகளை கேட்டபோது அவர்கள் எங்களுக்கு சரியான தகவல் தெரிவித்து பயிர் காப்பீட்டுத்தொகை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளான எங்களுக்கு இனிமேலும் காலதாமதம் செய்யாமல் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு பயிர் காப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பான கோரிக்கை மனுவை அவர்கள் கலெக்டரிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com