மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் - கிராம மக்கள் அறிவிப்பு

திருச்சிற்றம்பலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் - கிராம மக்கள் அறிவிப்பு
Published on

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம்-செருவாவிடுதி சாலையில் புதிதாக மதுக்கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியும், விவசாய நிலங்களும் உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு சித்துக்காடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கடை திறக்க தேர்வு செய்யப்பட்ட கட்டிடத்துக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்று, கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த சித்துக்காடு கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கடையை அடித்து நொறுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் தொடர்பாக 15 பேர் மீது திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனிடையே சித்துக்காடு கிராம மக்கள் சார்பாக அந்த கிராமத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர், மதுக்கடையை திறக்க ஆதரவாக செயல்பட்ட 25 பேர் மீது போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம்-செருவாவிடுதி சாலையில் புதிதாக மதுக்கடை திறக்க கூடாது, சித்துக்காடு கிராம மக்கள் சார்பாக பஞ்சவர்ணம் என்பவர் கொடுத்த புகாரின் மீது திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி திருச்சிற்றம்பலம் கடைவீதியில் உண்ணாவிரதம் இருக்க போவதாக சித்துக்காடு கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com