

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலியாகினர்.
கூலித்தொழிலாளி
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 49). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு சவுமியா (8) என்ற மகளும், புகழ் (7) என்ற மகனும் உள்ளனர்.
கவுசல்யா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர், தனது குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சித்தரேவில் இருந்து நிலக்கோட்டை அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.
தந்தை-மகள் பலி
வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சாலைப்புதூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வத்தலக்குண்டுவில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற கார், எதிர்பாராதவிதமாக முருகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சவுமியா, புகழ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக இறந்தாள்.
சோகம்
உயிருக்கு ஆபத்தான நிலையில் புகழுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக உறவினர் வீட்டுக்கு சென்ற போது தந்தை-மகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தந்தை, அக்காள் இறந்தது கூட தெரியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் புகழுக்கு, எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.