காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக டாக்டர் மீது பெண் டாக்டர் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்
Published on

ஆலந்தூர்,

சென்னை மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் டாக்டர் ஒருவர், வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். அவர், பரங்கிமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

2013-ம் ஆண்டு நான், தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது என்னுடன் படித்த ஆலன் லேபர் (28) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. எங்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி நாங்கள் காதலித்தோம்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆலன் லேபர் கூறியதால், அவருடன் நெருங்கி பழகினேன். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். எனவே உடனடியாக என்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஆலன் லேபரிடம் கூறினேன்.ஆனால் அவர், இதை எல்லாம் எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீ கருவை கலைத்துவிடு என்றார். இதற்கிடையில் ஆலன் லேபருக்கு அவரது வீட்டில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்து வருவது தெரிந்தது.

என்னை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணத்துக்கு மறுக்கும் டாக்டர் ஆலன்லேபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com