

சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மகன் பாலாஜி (வயது 21). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலாஜியிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு பாலாஜி மறுத்துள்ளார்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண், இதுபற்றி சங்கரன்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.