திருமணமான 4 மாதத்தில் பெண் சாவு, தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஆண்டிப்பட்டி அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் மரணம் அடைந்த சம்பவத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
திருமணமான 4 மாதத்தில் பெண் சாவு, தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை
Published on

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெற்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த ராசு மகன் ஜெயக்குமார் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா என்ற விமலா (22). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 4 மாதங்களில் பவித்ரா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தாயார் சித்ரா (48) ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப பிரச்சினையால் பவித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை அவருடைய கணவர் ஜெயக்குமார் தற்கொலைக்கு தூண்டியதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயக்குமார் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பு கூறினார். மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஜெயக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com