

அணைக்கட்டு,
அணைக்கட்டு தாலுகா தார்வழி கிராமத்தில் காளைவிடும் விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள கொணவட்டம், ஆலங்காயம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, திருப்பத்தூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. காளைகளை விரட்டுவதற்கும் காளை மீது கையைபோடுவதற்கும் ஏராளமான இளைஞர்கள் திரண்டிருந்தனர். அதேபோல் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்ப்பதற்காக பொதுமக்கள் மாடி வீடுகள் மீதும், கோவில் மதில் சுவர்கள் மீதும் நின்று வேடிக்கை பார்த்தனர்.
காளை விடும் விழா தொடங்குவதற்கு முன்பு அணைக்கட்டு கால்நடை மருத்துவர்கள் அரேஷ், உதவி மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்த பிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தனர். காளைவிடும் விழாவை அணைக்கட்டு தாசில்தார் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
11 பேர் காயம்
அதைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இளைஞர்களின் ஆரவாரத்தில் காளைகள் மிரண்டு தெருவில் அங்கும் இங்குமாக ஓடின. சில காளைகள் பாதுகாப்பு தடுப்பு கம்புகளை தாண்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை முட்டி தள்ளியது. இதில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் வினோத், பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
சீறிப்பாய்ந்து ஓடிய 2 காளைகள் தடுப்பு கம்புகளை உடைத்துக் கொண்டு சென்றதில் காளைகளுக்கு காயம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள், அந்த காளைகளுக்கு சிகிச்சை அளித்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
மண்டல துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டு தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை தார்வழி கிராமத்தை சேர்ந்த இளைஞர் நற்பணி மன்றத்தினரும், ஊர் பொது மக்களும் செய்திருந்தனர்.