

சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 52). தி.மு.க. பிரமுகர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுரேஷ் (35). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேசுக்கும், கர்ணன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் நேற்று நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த தனது நண்பர்களுடன் கர்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் கர்ணன் தரப்பை சேர்ந்த கரிகாலன், ஜீவா, சூர்யா, தளபதி, மோகன்குமார், அண்ணாதுரை ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசார் குவிப்பு
அதே போல சுரேஷ் தரப்பை சேர்ந்த காசி, கனகராஜ், முருகேசன், இவரது மனைவி பாக்கியம், ஆனந்த்பாபு, கமலம் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் தரப்பை சேர்ந்த குணசேகரன், கார்த்திக், ஆனந்த்பாபு, கனகராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அதே போல கர்ணன் தரப்பை சேர்ந்த கரிகாலன், விஜி, ஆர்.சூரியபிரகாஷ், ஏ.சூரியபிரகாஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.