பரங்கிமலையில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்

பரங்கிமலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கி ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பரங்கிமலையில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிர மணியம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் அதிகாரிகள் பரங்கிமலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் ஒரு காரில் பணத்தை கொண்டு சென்றது.

பரங்கிமலை பகுதியில் வந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. வங்கி ஏ.டி.எம்.களுக்கு கொண்டு செல்வதாக தனியார் நிறுவன ஊழியர் முகேஷ் தெரிவித்தார்.

ஆனால் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ரூ.1 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 981-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் குருபரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபன் கூறுகையில், பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் மேல் நடவடிக்கைக்காக வருமான வரி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com