அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி திட்டம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி, உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி திட்டம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
Published on

சிவகங்கை,

மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் மூலம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பையொட்டி சிறப்பு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் உணவு பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முதல்-அமைச்சர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் தினமும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1,000 மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படுகிறது. இதன்மூலம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 135 குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

அதுமட்டுமின்றி மேலும் விடுபட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து இந்த திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கிய சுகுமார், சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் மூர்த்தி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com