உளுந்தூர்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; 2,500 கோழிகள் கருகின

உளுந்தூர்பேட்டை அருகே கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்ததில் 2 ஆயிரத்து 500 கோழிகள் தீயில் கருகின. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உளுந்தூர்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; 2,500 கோழிகள் கருகின
Published on

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் அதே ஊரில் விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 3 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று காலையில் இந்த பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு முனையில் பிடித்த தீ, மளமளவென பண்ணை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதைபார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து பண்ணைக்குள் இருந்த கோழிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பண்ணையில் இருந்த 2 ஆயிரத்து 500 கோழிகள் தீயில் கருகி செத்தன. 500 கோழிகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டன.

இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கோழிப்பண்ணைக்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது தீ விபத்துக்கு வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com