

ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 49). இவருடைய விவசாய நிலத்தின் அருகில் சுமார் 50 ஏக்கர் அளவில் தைல மர தோப்புகள் உள்ளன. இவற்றில் உள்ள சுமார் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள மரங்களில் இருந்து விழுந்த தைல மர சருகுகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அர்த்தனேரி கிராமத்தில் அதே கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி(42), பொற் பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம்(46) ஆகியோரது தைல மரத்தோப்புகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசார் மற்றும் செந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வர தாமதம் ஏற்பட்டதால் தா.பழூர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தீ பரவாமல் தடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். போலீசாரின் இத்தகைய செயலை பார்த்த பொதுமக்கள் பாராட்டினர்.