

வேதாரண்யம்,
நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த ரவி, மூர்த்தி, செல்வகுமார் ஆகிய 3 மீனவர்கள் நேற்று முன்தினம் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, ஒரு படகில் வந்த இலங்கை மீனவர்கள் நாகை மீனவர்கள் சென்ற படகை சுற்றி வளைத்தனர். பின்னர்அவர்கள் நாகை மீனவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் அவர்களிடம் இருந்த ரூ. 3 லட்சம் வலை மற்றும் மீன்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
வலை, மீன்களை பறிகொடுத்த நாகை மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் எங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் நாங்கள் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை மற்றும் மீன்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். ஆனால் நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வந்து விட்டோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் படையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.