ஓமன் நாட்டில் படகில் தீ பிடித்து தொண்டி மீனவர் பலி

ஓமன்நாட்டில் தொண்டி மீனவர் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓமன் நாட்டில் படகில் தீ பிடித்து தொண்டி மீனவர் பலி
Published on

தொண்டி,

தொண்டி புதுக்குடியை சேர்ந்த முனீசுவரன் என்பவருடைய மகன் காட்டுமந்திரி (வயது 30). இவர் ஓமன் நாட்டில் கடந்த சில வருடங்களாக மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பைபர் படகு ஒன்றில் மீனவர் காட்டுமந்திரி, மற்றும் தொண்டி புதுக்குடி கிராமத்தை சேர்ந்த மீனவர் கனி (25) உள்பட தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இவர்களது படகில் பெட்ரோல் டேங்கில் தீ பிடித்துள்ளது. இதில் பைபர் படகு முழுவதுமாக தீபிடித்து சேதமடைந்த நிலையில் கடலில் மூழ்கி விட்டது. இந்த விபத்தில் மீனவர் காட்டு மந்திரி கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கடலில் தத்தளித்து கொண்டிருந்த மற்ற 3 மீனவர்களையும் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். படுகாயமடைந்த 3 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஓமன் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் சிலர் தொண்டி புதுக்குடி கிராமத்தை சேர்ந்த காட்டு மந்திரி மற்றும் மீனவர் கனி ஆகியோரின் குடும்பத்திற்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் காட்டு மந்திரியின் குடும்பத்தினரும் புதுக்குடி கிராம மக்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இந்நிலையில் ஓமன் நாட்டில் பலியான மீனவர் காட்டு மந்திரியின் உடலை தேடும் பணியில் அங்குள்ள மீனவர்கள் சிலர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்தில் பலியான மீனவர் காட்டுமந்திரிக்கு ரமாதேவி என்ற மனையும், 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com