மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி கவிழ்ந்தது மீன் வியாபாரி பலி 4 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் மின் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி கவிழ்ந்தது மீன் வியாபாரி பலி 4 பேர் படுகாயம்
Published on

பொள்ளாச்சி

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் மின் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மினிலாரி மோதியது

பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டிணத்தை சேர்ந்தவர் முகமது ஹக்கீம் (வயது 31), மீன் வியாபாரி. இவரது மனைவி கோபிகா (20). இவர்கள் 2 பேரும் மண்ணூரில் இருந்து ராமபட்டிணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே அரசாணிக்காய் ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமது ஹக்கீம், கோபிகா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் மோதியதும் நிலைதடுமாறி மினி லாரி ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது.

மீன் வியாபாரி பலி

இதன் காரணமாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்த அரசாணிக்காய்கள் சாலையில் உருண்டோடின. இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் படுகாயமடைந்த முகமது ஹக்கீம், கோபிகா, மினி லாரியின் பின்புறம் இருந்த கருமாண்டகவுண்டனூரை சேர்ந்த சண்முகசுந்தரம் (35), ராஜேந்திரன் (45), மணிகண்டன் (30) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முகமது ஹக்கீமை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

4 பேருக்கு சிகிச்சை

மேலும் முதலுதவி சிகிச்சைக்கு பின் ராஜேந்திரன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

கோபிகா, சண்முகசுந்தரம், மணிகண்டன் ஆகியோர் பொள்ளாச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மினி லாரியை ஓட்டி வந்த நடுப்புணியை சேர்ந்த டிரைவர் கார்த்திகேயன் (27) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com