

கும்பகோணம்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையொட்டி காலை 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கும்பகோணம் பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு மேல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பூ வியாபாரிகளிடம் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் கடைகளை அடைக்கும்படி கேட்டனர். ஆனால் வியாபாரிகள் கடையை அடைக்காமல் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட பூ வியாபாரிகள் 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
5 கடைகளுக்கு சீல்
இதேபோல் கும்பகோணம் நகரில் அரசின் உத்தரவை மீறி 10 மணிக்கு மேல் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். காலை 10 மணிக்கு மேல் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்தியாவசிய தேவை இல்லாமல் நகரில் சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் எச்சரித்தனர்.