

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த குடியரசு தினவிழாவில் 25 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
குடியரசு தின விழா
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தினவிழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்தில் பலூன்களையும் பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்று கொண்டார்.தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த 119 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் காவல் துறையினர் 48 பேருக்கு பதக்கங்கள், சமையல் போட்டியில் வெற்றி பெற்ற 2 சத்துணவு பணியாளர்களுக்கு விருது ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். விழாவில் 25 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தியாகியின் மனைவி கவுரவிப்பு
தொடர்ந்து கட்டிகானப்பள்ளி ஊராட்சி பெரியார் நகரில் உள்ள சுதந்திர போராட்ட தியாகியான மறைந்த சண்முகம் வீட்டிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, வருவாய் அலுவலர் சதீஷ், உதவி கலெக்டர் கற்பகவள்ளி ஆகியோர் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர். பின்னர் தியாகியின் மனைவி சரோஜாவிற்கு கதர் ஆடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி நலம் விசாரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வன அலுவலர் பிரபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், மாவட்ட வழங்கல் அலுவர் கனகராஜ், கூடுதல் பாலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், தங்கவேல், ஊர்க்காவல் படை மண்டல தளபதி கவுசிக்தேவ், கிருஷ்ணகிரி ஒன்றியக்குழு தலைவர் அம்சா ராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
==