கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானலில் பலத்த மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில், கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன் பிறகு சில நாட்கள் மழை பெய்ய வில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது.

அதன் பின்னர் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதையடுத்து மதியம் 2 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

நகரின் பல்வேறு இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாலை 5.30 மணி அளவில் கருமேக கூட்டத்தின் இடையே சூரியன் தனது கதிர்களை பரப்பியது. இதனால் அப்பகுதியில் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையில் வானவில் தோன்றியது. சுமார் 30 நிமிடங்கள் அந்த வானவில் தென்பட்டது. இதனை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com