கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர்களுக்கான நேர்காணலில் குவிந்த பட்டதாரி இளைஞர்கள்

புதுக்கோட்டை கலெக் டர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர்களுக்கான நேர்காணலில் பட்டதாரி இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர்களுக்கான நேர்காணலில் குவிந்த பட்டதாரி இளைஞர்கள்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 23 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அலுவலக உதவியாளர் பணி என்பதால் 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே பணிக்கான தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அரசு வேலை என்பதால் அதிக அளவிலான பட்டதாரி இளைஞர்களும், பொறியியல் பட்டதாரி இளைஞர்களும் இந்த அலுவலக உதவியாளர் பணிக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான நேர்காணல் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 23 அலுவலக உதவியாளர் பணிக்கு 1500-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் நேர்காணலுக்கு வந்திருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் பல பட்டதாரி பெண்கள் கைக்குழந்தைகளுடன் மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர்.

வேலை கிடைக்க வழிவகை

இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 500 பேராக பிரித்து அதிகாரிகள் நேர்காணல் நடத்தினார்கள். இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நேர்காணலில் கலந்து கொண்ட பட்டதாரி இளைஞர்கள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து முடித்துவிட்டு முறையான வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரி இளைஞர்களும் உள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது அலுவலக உதவியாளர் பணி என்றாலும் அரசு வேலை என்பதால் அதிக அளவிலான பட்டதாரிகள் நேர்காணலுக்கு வந்து உள்ளனர். அரசு கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, படித்த இளைஞர் களுக்கு வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com