உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி - சோதனை புகையிலை பொருட்களை விற்ற கடைக்கு சீல்

ராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர்.
உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி - சோதனை புகையிலை பொருட்களை விற்ற கடைக்கு சீல்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகரில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் லிங்கவேல், ஜெயராஜ் ஆகியோர் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த ஒரு கடையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்த இட்லி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையின் உரிமையாளரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறியதாவது:- பாரதிநகர் பகுதியில் ஒரே நேரத்தில் 13 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்மூலம் 4 கிலோ புகையிலை பொருட்கள், 7 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், காலாவதியான 13 லிட்டர் குளிர்பானங்கள் மற்றும் காலாவதியான தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் 4 கிலோ ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் முதல் முறை ரூ.2 ஆயிரம், 2-வது முறை ரூ.5 ஆயிரமும், 3-வது முறை ரூ.10 ஆயிரமும், அடுத்த முறை ரூ.10 ஆயிரம் மற்றும் கடையின் உரிமம் ரத்துடன் வழக்கு தொடரப்படும். இதேபோன்று புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் முதல் முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும், 3-வது முறை ரூ.25 ஆயிரமும், அடுத்த முறை ரூ.25 ஆயிரம் மற்றும் கடையின் உரிமம் ரத்துடன் வழக்கு தொடரப்படும். இவ்வாறு கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com