

நெல்லை,
நெல்லை அருகே தொழிலாளியை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
தொழிலாளி வெட்டிக்கொலை
நெல்லை அருகே உள்ள கீழ ஓமநல்லூரை சேர்ந்தவர் எடிசன் சுவிஷேசமுத்து(வயது47). கூலித்தொழிலாளி. இவரும், மேல ஓமநல்லூரை சேர்ந்த பாலசுப்பிரமணியனும் நண்பர்கள். இந்தநிலையில் எடிசன் சுவிஷேசமுத்து, சூதாடியதை போலீசில் பாலசுப்பிரமணியன் காட்டிக்கொடுத்தாக கூறி அவரை எடிசன் சுவிஷேசமுத்து, அரிவாளால் வெட்டினார். இதில் பாலசுப்பிரமணியத்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இருவருடைய குடும்பத்திற்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியத்தின் மகன் பிச்சுமணி என்ற பிச்சைமணி(30) என்பவர், எடிசன் சுவிஷேசமுத்துவை கொலை செய்ய திட்டமிட்டு, அதே ஊரை சேர்ந்த இசக்கிமுத்து(40) என்பவருடன் சேர்ந்து, கடந்த 1442013 அன்று, பொன்னாக்குடி டாஸ்மாக் கடையில் வைத்து எடிசன் சுவிஷேசமுத்துவை வெட்டிக்கொலை செய்தனர்.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்சுமணி, இசக்கிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்து, நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பிச்சுமணி, இசக்கிமுத்து ஆகிய 2 பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ராஜேசுவரன் ஆஜரானார்.