கல்லூரி மாணவிக்கு காதலர் தின வாழ்த்து: விரிவுரையாளர் தாக்கியதால் வாலிபர் தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த வாலிபரை கவுரவ விரிவுரையாளர் தாக்கினார். இதில் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள், விரிவுரையாளரின் வீட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
கல்லூரி மாணவிக்கு காதலர் தின வாழ்த்து: விரிவுரையாளர் தாக்கியதால் வாலிபர் தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருக உள்ள மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் நவீன் (வயது 23). கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் பென்னாகரம் அரசு கலைக்கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காதலர் தினத்தையொட்டி வாலிபர் நவீன் தனது காதலிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவிக்க கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரி வளாகத்தில் வாலிபரும், மாணவியும் நின்று பேசி கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் கோபி, மாணவியை கண்டித்ததுடன், வாலிபரை தாக்கி அவருடைய செல்போனை பறித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

தனது காதலி முன்பு விரிவுரையாளர் அடித்ததால் மனமுடைந்த வாலிபா வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீனின் உடலை எடுத்து சென்று பேடரஅள்ளியில் உள்ள கவுரவ விரிவுரையாளர் கோபி வீட்டு முன்பு வைத்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கோபியின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த வாலிபர் விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com