மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள்

மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள்
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதன்படி 5 அல்லது அதற்கு மேலான நபர்கள் எந்த ஒரு பொது இடங்களிலும் கூட தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரலாம். அதுவும் ஒரு மீட்டர் தொலைவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை பெற பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று கண்காணிக்கப்படுவது அவர்களின் வீட்டை சுற்றி உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தியும், இது குறித்த தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கும் 144 தடை உத்தரவு குறித்து விழிப்புணர்வு உள்ளது. பொதுமக்களும் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்படும். அத்தியாவசியம் உள்ள தொழிற்சாலைகள் விண்ணப்பித்து உரிய காரணங்களை தெரிவித்தால் தேவைப்படும் பட்சத்தில் அந்த தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகளிலும் குறைந்த அளவிலான ஆட்கள் மட்டுமே பணியில் ஈடுபடுவார்கள்.

144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்கள்மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com