கூட்டணிக்காக பா.ஜ.க. கொள்கையை மாற்றிக்கொள்ளாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

கூட்டணிக்காக பா.ஜ.க. தனது கொள்கையை மாற்றி கொள்ளாது என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
கூட்டணிக்காக பா.ஜ.க. கொள்கையை மாற்றிக்கொள்ளாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய நல்வாழ்வு மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்து பேசினார். இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருவது குறித்த கேள்விக்கு, அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசி வருகின்றனர். ஆனால் அரசியல் லாபத்திற்காக எந்த ஒரு துறையையும், பிரிவையும் பயன்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அரசியல் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. பா.ஜ.க. கூட்டணிக்காக தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாது. கூட்டணிக்காக யாரிடமும் கையேந்தும் நிலையில் பா.ஜ.க. இல்லை. என்றார்.

தொடர்ந்து இலங்கையில் ராஜபக்சே பொறுப்பேற்று உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கடந்த 2009-ம் ஆண்டு சம்பவத்தை மறந்துவிட முடியாது. அவர் பொறுப்பேற்று உள்ள நிலையில், அதுபோன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்பதே விருப்பம். பிரதமர் மோடி அரசும் அது போன்று நடக்க விடாது ஏனென்றால், மோடி தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். கடந்த மாதம் இந்தியா வந்த ராஜபக்சே 2009-ம் ஆண்டு போரின்போது காங்கிரஸ், தி.மு.க. அரசு தான் எங்களுக்கு உதவி செய்தது என்று கூறி உள்ளார். குற்றவாளி கூண்டில் காங்கிரஸ் உள்ளது. இதற்கு தி.மு.க.வும் வாய் திறக்காமல் உள்ளது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com