

கொடைக்கானல்,
கொடைக்கானல் தாலுகா மன்னவனூரில் வனத்துறையின் சார்பில் சூழல் சுற்றுலா மையம் (எக்கோ டூரிசம்) செயல்பட்டு வருகின்றது. சுற்றுலா பயணிகளை கொள்ளை கொள்ளும் வகையில் இங்குள்ள புல்வெளிகள், நடைபயிற்சி இடம், பரிசல்சவாரி ஆகியவை உள்ளது.
அமைதியான சூழலில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் பொழுது போக்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிக வெப்பமும், இரவில் கடும் குளிரும் நிலவுவதால் புற்கள் கருகியுள்ளன. இதனால் தீ விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதைக்கருத்தில் கொண்டு சூழல் சுற்றுலா மையம் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் புற்கள் கருகியதால் பராமரிப்பு பணிகளுக்காகவும் இன்று (அதாவது நேற்று) சூழல் சுற்றுலா மையம் மூடப்படுகின்றது. புல்வெளிகளின் மீது மோட்டார் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த உடன் மீண்டும் புற்கள் பசுமையாக மாறும். அதனை தொடர்ந்து சூழல் சுற்றுலா மையம் திறக்கப்படும் என்றனர்.