மெட்ரோ ரெயில் பணிக்காக வேயப்பட்ட இரும்பு கம்பிகள் பஸ் மீது விழுந்ததால் பரபரப்பு

காந்திவிலியில் மெட்ரோ ரெயில் பணிக்காக வேயப்பட்ட இரும்பு கம்பிகள் பஸ் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பஸ் பயணிகள் உயிர் தப்பினர்.
மெட்ரோ ரெயில் பணிக்காக வேயப்பட்ட இரும்பு கம்பிகள் பஸ் மீது விழுந்ததால் பரபரப்பு
Published on

மும்பை,

மும்பையில் அந்தேரி கிழக்கு - தகிசர் கிழக்கு இடையே 7-வது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகின்றன. மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்காக ராட்சத கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன.

கான்கிரீட் தூண்கள் கட்டுவதற்காக இரும்பு கம்பிகள் வேயப்பட்டு உள்ளன. இந்த நிலயில், நேற்று பகல் 11.30 மணியளவில் காந்திவிலி தாக்கூர் பகுதியில் கான்கிரீட் தூண் கட்டுவதற்காக வேயப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் திடீரென சரிந்தது.

அந்த இரும்பு கம்பிகள் அருகில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த பெஸ்ட் பஸ்சின் மேற்கூரையில் விழுந்தது. திடீரென பயங்கர சத்தத்துடன் விழுந்த இரும்பு கம்பிகளால் பஸ்சில் இருந்த பயணிகள் திடுக்கிட்டனர். பஸ் முன்னேறி செல்ல முடியாமல் நடுவழியில் நின்றது. பயணிகள் அனைவரும் பதறி அடித்து கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள்.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அந்த இரும்பு கம்பிகளை அகற்றி பஸ்சை மீட்கும் பணிகள் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com