ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்கள் அடிப்படை வசதி இன்றி தவிப்பு

பெரம்பலூரில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்கள் அடிப்படை வசதி இன்றி தவித்து வருகின்றனர்.
ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்கள் அடிப்படை வசதி இன்றி தவிப்பு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

அதன்படி தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு முதல் கட்டமாக தினமும் காலையில் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அடுத்த நாள் மருத்துவ பரிசோதனைக்காக தங்க வேண்டி உள்ளது. மற்றவர்கள் அவரவர் ஊர்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் தேர்வாகி உள்ளவர்கள் தங்க இட வசதி இன்றி தவித்து வருகின்றனர். மேலும் குளிக்க வசதி இல்லாமல் ஆங்காங்கே உள்ள கிணறுகளில் இறங்கி குளித்து வருகின்றனர். அதே போன்று தேவையான அளவு கழிப்பிட வசதி இல்லாமல் ஆங்காங்கே உள்ள காடுகளில் பாட்டிலில் தண்ணீரை எடுத்துக்கொண்டு சென்று காலைக்கடன்களை முடிக்கின்றனர்.

அதே போன்று மரங்களின் அடியில் படுத்துக்கொள்கின்றனர். இரவு நேரங்களில் கொசுத்தொல்லைகளால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த முகாம் வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தத்தில் முகாமில் கலந்து கொள்ள வரும் இளைஞர்கள் அடிப்படை வசதி இன்றி தவித்து வருகின்றனர். இது குறித்து முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் கூறும் போது, குளிப்பதற்கு போதிய வசதி இல்லை. அதே போன்று கழிப்பிட வசதியும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com