பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவருக்கு 5 ஆண்டு சிறை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவருக்கு 5 ஆண்டு சிறை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு
Published on

பூந்தமல்லி,

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்ததாக கடந்த 2014-ம் ஆண்டு ஜாகிர் உசேன் (வயது 37) என்பவரை உளவுத்துறை அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான கள்ள நோட்டுகளும், இந்திய பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். இதில் சிவபாலன், முகமது சலீம் என மேலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரையும் தண்டையார்பேட்டையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதுடன், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததும் உறுதியானது. இந்த 3 பேர் மீதும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் ஜாகிர் உசேனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஏற்கனவே தீர்ப்பு அளித்து இருந்தார். அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மீதமுள்ள 2 பேர் மீதான வழக்கின் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முகமது சலீமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சிவபாலன் குற்றத்தை ஒப்புக்கொண்டு அரசு தரப்பு சாட்சியாக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com