பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்க மக்களுக்கு மைசூரு ராணுவ ஆராய்ச்சி மையங்களில் உணவுகள் தயார்

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்க மாநில மக்களுக்கு மைசூரு ராணுவ ஆராய்ச்சி மையங்களில் உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்க மக்களுக்கு மைசூரு ராணுவ ஆராய்ச்சி மையங்களில் உணவுகள் தயார்
Published on

மைசூரு,

மைசூருவில் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் ராணுவ உணவு ஆராய்ச்சி மையம் ஆகியவை உள்ளன. இந்த 2 ஆராய்ச்சி மையங்களில் இருந்தும் பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநில மக்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்த 2 ஆராய்ச்சி மையங்களில் இருந்தும் தற்போது உணவு தயாரித்து அனுப்பப்படுகிறது. இதில் முதல்கட்டமாக உப்புமா, சப்பாத்தி, தக்காளி பலாவ், சாக்லெட் துண்டுகள், குளிர் பானங்கள், பிஸ்கெட்கள் ஆகியவற்றை தனித்தனி பொட்டலங்களாக தயாரித்து வருகிறார்கள். இதில் உப்புமா, சப்பாத்தி, தக்காளி பலாவ் போன்ற உணவு வகைகளை தயாரித்து, அவைகள் கெட்டுவிடாமல் இருக்க பிரத்யேகமாக பார்சல் செய்து வருகிறார்கள். இப்பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி ஆராய்ச்சி மைய இயக்குனர்கள் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய இயக்குனர் ராகவா ராவ், ராணுவ உணவு ஆராய்ச்சி மைய இயக்குனர் செம்வால் ஆகியோர் நிருபர் களிடம் கூறியதாவது:-

புதுடெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உயர் அதிகாரிகளிடம் இருந்து ஒடிசா, மேற்கு வங்கத்தில் பானி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தற்போது அதிகாரிகளின் உத்தரவுப்படி முதல்கட்டமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது பார்சல் செய்யப்பட்டு தயாராக உள்ள உணவுகளை ராணுவ ஹெலிகாப்டர் அல்லது ராணுவ விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அதற்காக அறிவிப்பு வந்தவுடன் உணவுகளை அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com