மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் மேற்கொள்ளப்பட்டது

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் மேற்கொள்ளப்பட்டது
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 206 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 566 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். இவர்களில் 18 ஆயிரத்து 796 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு தேர்வு முடிவு வெளியான நாளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த மதிப்பெண் பட்டியல் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கவை என்பதால் நேற்று அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெகதீசன், வடக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி பாண்டியன், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பார்வதி ஆகியோர் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி சென்றனர்.

இதேபோல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் பள்ளிகளிலேயே மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பதிவு செய்த அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகியவற்றை மாணவர்கள் கொண்டு வர வேண்டும் எனவும், இன்னும் 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் எனவும் முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் கூறினார்.

மேலும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கும் நேற்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com