கூட்டணி ஆட்சியை காப்பாற்ற சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி ஜனதா தளம் (எஸ்) முடிவு

கூட்டணி ஆட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க ஜனதா தளம் (எஸ்) முடிவு செய்துள்ளது.
கூட்டணி ஆட்சியை காப்பாற்ற சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி ஜனதா தளம் (எஸ்) முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள ஒரு ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் விவாதத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை கூறினார்.

முன்னதாக சித்தராமையா பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அவர்கள், ஆட்சியை காப்பாற்றுவது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தி அழைத்து வருவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய மந்திரிகள், நீங்கள் (சித்தராமையா) முதல்-மந்திரியானால் ஜனதா தளம் (எஸ்) ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறினர். இதை நிராகரித்துவிட்ட சித்தராமையா, தனக்கு முதல்-மந்திரி பதவி வேண்டாம், முதலில் ஆட்சியை காப்பாற்ற முயற்சி செய்யலாம், அதன் பிறகு மற்ற விஷயங்களை பேசிக்கொள்ளலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினாலும், இதை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏற்கும் மனநிலையில் இல்லை என்றே சொல்லப்படுகிறது. முதல்-மந்திரி பதவி சித்தராமையா உள்பட யாருக்கு வழங்கினாலும் அதை ஏற்கும் மனநிலையில் தாங்கள் இல்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறியிருக்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com