தானிப்பாடியில், மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலி

தானிப்பாடியில் மர்ம காய்ச்சலுக்கு 2 வயது பெண் குழந்தை பலியானாது.
தானிப்பாடியில், மர்ம காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலி
Published on

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தில் ஊத்தங்கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், கூலி தொழிலாளி. இவரது மகள் மோனிஷாவுக்கு (வயது 2), கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவளை தானிப்பாடி அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மோனிஷா இறந்து விட்டாள். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தை இறந்து போனதற்கான காரணம் கேட்டனர். ஆனால் டாக்டர்கள் பதில் கூறுவதற்கு மறுத்து விட்டனர். பின்னர் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் இறுதிச்சடங்கு செய்தபின் நேற்று காலை தானிப்பாடியில் அடக்கம் செய்தனர்.

கோவிந்தராஜ் தம்பதிக்கு அன்பு (4) என்ற மகனும் உள்ளான். அவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு குணமானது. இதுபோன்ற காய்ச்சலை தடுக்க தீவிர சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com