வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

வீராம்பட்டினம் கடற் கரையில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
Published on

அரியாங்குப்பம்,

புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை குறிவைத்து சின்னவீராம்பட்டினம், நோணாங்குப்பம் படகு குழாம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருகிறது.

இதுபற்றி அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் அரியாங்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது வீராம்பட்டினம் கடற்கரையில் சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் நின்றுகொண்டிருந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். இதில் 4 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஓடைவெளி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தினகரன் (வயது 19), இளங்கோவன் (20), சின்னவீராம்பட்டினம் அஜித்குமார் (20), மணிபாரதி (19) என்பதும், இவர்கள் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 கிராம் எடைகொண்ட 21 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com